ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி இன்று காலை பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் 11 நாட்கள் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நேற்று துவங்கியது.

நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இரவு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(29ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார். 2ம் திருநாளான இன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார். வீதிகளில் திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் கொடியாலம் சேஷாத்ரி அய்யங்கார் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.

அங்கு மாலை 6.30 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் அடைகிறார். 4ம் தேதி நெல்லளவு கண்டருள்கிறார். 5ம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 8ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: