புதுடெல்லி: வாட்ஸ் அப் உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 20ம் தேதி விசாரிக்க உள்ளது.இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு நிறுவனம், பெகாசஸ் என்ற தொழில்நுட்பத்தின் மூலம், உலக முழுவதிலும் 1,400 பேரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்தது. இதில், இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களும் அடங்குவர் என வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதம் 31ம் தேதி அதிர்ச்சி தகவல் வெளியிட்டது.இது, அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை தர மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டார். இந்நிலையில், வாட்ஸ் அப் உளவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 20ம் தேதி நடக்கும் தனது அடுத்த கூட்டத்தில் விசாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.