புஸோ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலக சாம்பியன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முதல் சுற்றில் சீன தைபே வீராங்கனை பாய் யூ போவுடன் (42வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (6வது ரேங்க்) 13-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 21-18 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. கடும் இழுபறியாக அமைந்த இந்த போட்டியில் பாய் யூ போ 21-13, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 14 நிமிடத்துக்கு நீடித்தது. உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு விளையாடிய தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சிந்துவுக்கு இந்த தோல்வி மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.