வங்கியில் ரூ.7,200 கோடி மோசடி சென்னை, பெங்களூர் உள்பட 190 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற ரூ.7,200 கோடி மோசடி தொடர்பாக, சிபிஐ 42 வழக்குகள் பதிவு செய்து நாடு முழுவதும் 190 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பாரத ஸ்ேடட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகளில்சுமார் ரூ.7,200 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கி மோசடியில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சிபிஐ தனித்தனி வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் 42 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென 190 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.  இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

மகாராஷ்டிரா வங்கியில் ரூ.113.55 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக எஸ்இஎல் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.118.49 கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்ட அட்வான்ஸ் சர்பேக்டன்ஸ் நிறுவனம், தேனா வங்கியில் ரூ.42.16 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட எஸ்கே நிட் நிறுவனம், கனரா வங்கியில் ரூ.27 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணா நிட்வேர் நிறுவனம் ஆகியவை வங்கியில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி, குர்கான், பெங்களுரூ, திருப்பூர், சென்னை, மதுரை, கொல்லம், கொச்சி, அகமதாபாத், கான்பூர், போபால், வாரணாசி,  குர்தாஸ்பூர், கொல்கத்தா, பாட்னா, கிருஷ்ணா மற்றும் ஐதரபாத் உள்ளிட்ட 190 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: