புதுடெல்லி: ‘டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நலமாக இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை,’ என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்து விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும், இதே முறைகேடு வழக்கில் நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றத்துக்காக அமலாக்கத் துறை அவரை கைது செய்ததால், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், குடல் அழற்சி நோயால் சிதம்பரம் அவதிப்பட்டு வருகிறார். தனது உடல் நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்கும்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது.