நாகை: நாகை அருகே கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தததில் வீட்டில் இருந்த 3 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பெய்த கனமழையால் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை முற்றிலும் மளமளவென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த மூன்று பேரும் உயிர்தப்பினர். சுனாமியில் பாதிக்கப்பட்டு வீடு, உடமைகளை இழந்த அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு பிரபல தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2007ம் ஆண்டு 68 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதில் பல வீடுகள் சிதிலமடைந்து குடியிருக்க தகுதி அற்றதாக மாறி இருக்கிறது. மேலும் மழை நீர் வீட்டிற்குள் ஒழுகுவது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நீடித்து வருவதால் அங்கு வசிக்க முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவிக்கின்றனர். தொடர்ந்து, தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.