திருமலை: டிக்டாக் காதலியை அரசு அதிகாரி ஒருவர் 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தன்னை கொல்ல முயல்வதாக முதல் மனைவி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் இப்ராகிம் பட்டணத்தை சேர்ந்தவர் சத்யம்ராஜூ. விஜயவாடா அனல் மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா. இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சத்யம்ராஜூக்கு, ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் ‘டிக்டாக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழகி வந்த இவர்கள் காதலித்து வந்துள்ளனர். அப்போது சத்யம்ராஜூ தனக்கு திருமணமானதை காதலியிடம் தெரிவிக்கவில்லையாம். இதற்கிடையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருப்பதியில் சத்யம்ராஜூம், இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர்.