மூலவருக்கு சிறப்பு பூஜைகளுடன் திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை 10 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோயில் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. இன்று காலை சண்முகப் பெருமானுக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை  செய்தனர்.2ம் நாளான நாளை காலை 10 மணிக்கு மூலவருக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். 3ம் நாள் மூலவருக்கு தங்க கவச அலங்காரம செய்யப்படுகிறது. 4ம் நாள் மூலவருக்கு திருவாபரண அலங்காரமும் ஐந்தாம் நாள் மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரமும்  6ம் நாள் சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. நவம்பர் 2ம் தேதி மாலை 5 மணிக்கு காவடி மண்டபத்தில் வைக்கப்படும் சண்முகப் பெருமானுக்கு 2 டன் மலர்களால் லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. 7ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்யாண உற்சவ ஊர்வலம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனி குமார் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதுபோல் நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டை ஆறுமுகசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்போரூரிலும் கோலாகலம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் எம்எல்ஏ இதயவர்மன் கலந்துகொண்டார். இன்று மாலை பச்சைக்கிளி வாகனத்திலும், நாளை ஆட்டுக்கிடா வாகனத்திலும், வரும் 30ம் தேதி புருஷாமிருக வாகனத்திலும் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. 31ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும் பூத வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நவம்பர் 1ம் தேதி வெள்ளி அன்ன வாகனத்தில் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் வரும் 2ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

Related Stories: