தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறையாக தேர்தல் களம் கண்ட ஆதித்ய தாக்கரே மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் இளைஞரணியான யுவசேனா தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஆதித்ய தாக்கரே, இந்த தேர்தலில் தனது தந்தை உத்தவ் தாக்கரேயை விட கூடுதல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே, ஒர்லி தொகுதி வேட்பாளராக ஆதித்ய தாக்கரே அறிவிக்கப்பட்டார். ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுரேஷ் மானே களமிறக்கப்பட்டார். மாநிலத்தின் பல பகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேக்கு ஆதரவு தெரிவித்தது. ஆதித்ய தாக்கரே, சுரேஷ் மானே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி சார்பில் கவுதம் கெய்க்வாட் தவிர 13 பேர் ஒர்லி தொகுதியில் போட்டியிட்டனர். 2,83,526 வாக்காளர்களை கொண்ட ஒர்லி தொகுதியில் 1,38,522 வாக்குகள்(48.86 சதவீதம்) பதிவானது. இதில் ஆதித்ய தாக்கரே 79,299(70.32 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இதர 12 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மாநில அளவில் ஆதித்ய தாக்கரே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.