மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கள்ள நோட்டுகளை விற்றதாக அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அனைவரும் உறங்கி கொண்டிருந்த வேளையில் வழக்கம் போல் விழித்திருந்து பணியை மேற்கொண்டிருந்தது காவல்துறை. உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அதிகாலை சுமார் 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் முப்பது 500 ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் பேரையூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கீர்த்திகான், ஈஸ்வரன் மற்றும் மணிகண்டன் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளிவந்தது.