அவிநாசி: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே 500 ஆண்டு பழமையான சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருவதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் ஊராட்சிப்பகுதியில் ஐநூறு ஆண்டு காலம் பழமையான புள்ளச்சாமி என்றழைக்கப்படும் சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் பகுதியில் சுடுமண் சிற்பங்களுக்கு இடையே இந்த சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை அப்பகுதி கிராம மக்கள் பரம்பரையாக பாரம்பரியமாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற வரலாற்று ஆய்வாளர்கள் புலவர் சுந்தர கணேசன் மற்றும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் இச்சிலையை கண்டுமிகுந்த ஆச்சரியமடைந்தனர்.