அகமதாபாத்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலின்போது, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலை குற்றம் சாட்டப்பட்டவர் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணாவதன் பிரம்பாட் என்பவர் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று இழிவாக பேசி இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500வது பிரிவுகளின் கீழ், ராகுல் காந்தி அவதூறு குற்றம் இழைத்துள்ளார், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.