புனே: இந்திய அணி பந்துவீச்சாளர்கள் எத்தகைய சவாலுக்கும் தயாராக இருப்பதால் ஆடுகளத்தின் தன்மை பற்றி கவலைப்படுவதில்லை என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் புனேவில் நாளை தொடங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று பேசிய இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது: ஆடுகளம் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கேட்டுக் கொண்டதில்லை. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்க விரும்புகிறோம்.