விழுப்புரத்தில் சிசிடிவி காட்சியால் சிக்கினார் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் ஊஞ்சல் ஆடிய வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோ (56). விழுப்புரத்தை அடுத்த தென்பேர் அரசு பள்ளி முதுகலை ஆசிரியர். கடந்த மாதம் 18ம் தேதி இரவு அவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது இவருடைய வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்தவர், 2வது மாடியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினார். இந்த காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து ஆசிரியர் இளங்கோ கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் (35) என்பதும், இவர் ஆசிரியர் இளங்கோ வீட்டில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடச்சென்றபோது நாய் குரைத்துள்ளது. அதற்கு பயந்து வீட்டின் மாடிக்குச்சென்றவர் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சச்சிதானந்தத்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சச்சிதானந்தம் பெட்ரோல் திருடி விற்பனை செய்வதைேய வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

Related Stories: