நவராத்திரி பண்டிகை என்றாலே மைசூரு தசரா அனைவரின் நினைவுக்கு வரும். மைசூரு தசரா விழாவில் பாரம்பரிய கலை, நாட்டுபுற கலை, விவசாயிகள் தசரா, மல்யுத்தம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது விழாவின் பத்தாவது நாளான விஜயதசமி நாளில் நடக்கும் யானை ஊர்வலமும், அதில் சாமுண்டீஸ்வரி தேவியை அலங்கரித்து கொண்டு செல்லப்படும் தங்க அம்பாரியும் முக்கிய இடம் பிடித்துள்ளன.மைசூரு மன்னர் பரம்பரையின் சின்னமாக கருதப்படுவது தங்க அம்பாரி. தங்கம், வைரம், வெள்ளி, ரத்தினம், மாணிக்கம் உள்ளிட்ட கனிமங்கள், யானைத் தந்தம், சந்தனக் கட்டை மற்றும் மதிப்பு மிக்க பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தை மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பயன்படுத்தி வந்தனர். நவராத்திரி விழா நாட்களில் இந்த தங்க அம்பாரியில் அமர்ந்து தர்பார் நடத்துவார்கள். அப்போது மன்னார் அரசாட்சியின் கீழ் உள்ள பகுதியில் இருந்துவரும் மக்களுக்கு மன்னர்கள் தானம், தர்மம் வழங்கியுள்ளனர். விஜயதசமி நாளில் யானை மீது தங்க அம்பாரி பொருத்துவார்கள். அதில் அமர்ந்து மன்னர் வீதி உலா அழைத்து வரப்படுவார். நாடு சுதந்திரம் பெற்று மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தபின், விஜயதசமி நாளில் நடக்கும் யானை ஊர்வலத்தின் போது, மன்னருக்கு பதிலாக சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து ஊர்வலம் எடுத்துவரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அம்பாரியை காண்பதற்கான லட்சக்கணக்கான மக்கள் தசரா விழா நாளில் கூடுகிறார்கள்.