திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தில் நான்காம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி கற்ப விருட்ச வாகனத்தில் வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி சமர்ப்பிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று மலையப்பசுவாமி கற்ப விருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜமன்னார் வேணுகோபாலகிருஷ்ணர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமிதமாக நான்குமாட வீதிகளில் உலா வந்தார். சொர்க்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரம் அருளிய கற்பக விருட்ச மரம் போன்று கலியுகத்தில் பக்தர்களுக்கு கேட்கும் வரம் அருளும் வகையில் மலையப்பசுவாமி இக்கோலம் பூண்டிருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது.