நவராத்திரி விழாவில் பங்கேற்க கோலாகலமாக திருவனந்தபுரம் புறப்பட்ட சுவாமி விக்ரகங்கள்: பத்மநாபபுரத்தில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

தக்கலை: திருவிதாங்கூரின்  தலைநகராக பத்மநாபபுரம்  இருந்தபோது அரண்மனையில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. தலைநகர்,  திருவனந்தபுரத்திற்கு மாறியதும் விழாவும்  திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக  குமரியில் இருந்து  சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி,  அரண்மனை தேவாரக்கெட்டு  சரஸ்வதி தேவி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று  வருவது பல காலமாக நடந்து  வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 29ம்  தேதி தொடங்கி  அக்டோபர் 8ம் தேதி  வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பத்மநாபபுரம்   அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் நேற்று திருவனந்தபுரம்  புறப்பட்டது. இதை ஒட்டி பவனியின் முன்னே  கொண்டு செல்லப்படும் மன்னரின் உடைவாள் கைமாறும்  நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை  மாளிகையில் நடந்தது. அரண்மனை அலுவலர்  அஜித்குமார் பூஜையில் வைக்கப்பட்டு இருந்த உடைவாளை எடுத்து கேரள  தொல்லியல் துறை டைரக்டர் சோனாவிடம்  கொடுத்தார். பின்னர் இதை கேரள  துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை  அமைச்சர் கடநப்பள்ளி ராமச்சந்திரன்  பெற்றுக் கொண்டார்.

பின்னர் உடைவாள்  கைமாறும் நிகழ்ச்சி நடைபெற்றது.  உடைவாளை கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி  சுரேந்திரன், குமரி மாவட்ட  அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம்  ஒப்படைத்தார். தொடர்ந்து  உடைவாள், அரண்மனை தேவாரக்கெட்டு  சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு  பூஜைகள் செய்யப்பட்டன. அங்கிருந்து  அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி,  யானை மீது அமர, பல்லக்குகளில்  சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை  முருகன் ஆகியோர்  வீற்றிருக்க பவனி தொடங்கியது. பவனி  அரண்மனை வளாகத்தில்  வந்ததும் முகப்பில் வைத்து அரண்மனை நிர்வாகம்  சார்பில் பாரம்பரிய  முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பவனி  28ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.

Related Stories: