பெங்களூரு: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி 17 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், விளக்கம் கேட்டு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் ஆட்சியின்போது பதவியிழந்த 15 எம்எல்ஏ.க்கள், அப்போதைய சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணாமூராரகா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி ஆஜராகி வாதம் செய்தபோது, ‘‘மனுதாரர்களின் முழுமையான விளக்கத்தை பெறாமல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறித்து அப்போதைய சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்ததும் தவறு. ஆகவே சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது. கர்நாடகாவில் தற்போது காலியாக உள்ள 15 பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதவி பறிக்கப்பட்டவர்கள் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.