கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் 51 நாட்களுக்கு பிறகு நாளை திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால், விடுமுறை நாட்களில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு வருகின்றனர். இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி அடிவாரம் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 4ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும், கனமழையால் அருவிக்கு செல்லும் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது. அருவியில் குளிக்கும் பகுதிகளில் பெரிய, பெரிய குழிகள் ஏற்பட்டது. வெள்ளத்தில் மண், ஏராளமான மரங்கள், பாறைகள் அடித்துவரப்பட்டு இருந்தது.