நாடாளுமன்றத்தில் பல வேடங்களில் போராடியவர் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பி மரணம்

சித்தூர்: ஆந்திர மாநிலம் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு வேடங்களில் போராடிய தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பி சிவபிரசாத் நேற்று இறந்தார்.சித்தூரில் முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி எம்பி சிவபிரசாத் உடல் நலக்குறைவால் கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில்  2009, 2014ம் ஆண்டுகளில் சித்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இவர் ஆந்திர மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடமிட்டு  எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால், இவர் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்காமல்  ஆந்திர மாநிலத்தை   இரண்டாக  பிரித்தது. மேலும்,  இவர்  25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  வில்லனாகவும், காமெடி நடிகராகவும்  நடித்து ஆந்திர மாநில மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் 10ம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் எம்பி சிவபிரசாத் இறந்தது அக்கட்சியினர் இடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: