போபால்: மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது ஏரியில் படகுகள் கவிழ்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள காட்லபுரா பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து, அங்குள்ள ஏரியில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக பக்தர்கள் 2 படகுகளில் சென்றனர். விநாயகர் சிலையை படகில் இருந்து பக்தர்கள் ஏரியில் தள்ளினார்கள். அப்போது படகு சமநிலையை இழந்து ஏரியில் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். மற்ெறாரு படகில் இருந்தவர்கள் இதனை பார்த்தனர். ஏரியில் விழுந்தவர்களை காப்பற்ற முயற்சித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த படகும் ஏரியில் மூழ்கியது. அதிகாலை 4.30 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு படகுகளிலும் இருந்த 17 பேர் ஏரியில் மூழ்கினார்கள்.