புதுடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் 22ம் நாள் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான், ‘‘தற்போது இந்த வழக்கில் ஆஜராவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை,’’ என்றார். மேலும், தனக்கு மிரட்டல் வந்தது பற்றியும், தனது உதவியாளர் தாக்கப்பட்டது குறித்தும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். மேலும், கடந்தாண்டு உ.பி. அமைச்சர் முகுத் பிகாரி வர்மா, `கோயிலும் உச்ச நீதிமன்றமும் எங்களுடையது என கூறியதை சுட்டிக்காட்டினார். இதற்காக, ‘அவர் மீது நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதில்லை’ என்றும் தெரிவித்தார்.