சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரிய குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது: சிவகங்கை அருகே கோவானூரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவானூர் பெரிய கண்மாய் என அழைக்கப்படுகிற மேலக்கோவானூர் கண்மாயில் மக்களால் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறப்படும் இரட்டைத்தூண் குமிழி மடை ஒன்று காணப்படுகிறது. இத்தூண்களின் உள்பகுதிகளில் கல்வெட்டு எழுத்து உள்ளது. சோழர், பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழி மடை அமைப்பு ஏரி, குளங்கள் கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நீரையும், வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் அமைக்கப்படும். பொதுவாக மடைகள் கரையோரங்களில் காணப்படும். ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு அரை வட்ட வடிவில் மடைத்தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது.