ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சி தலைவர் அரசை தாக்கி பேசி இருந்தாலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது உண்மை தான் என்று கூறியுள்ளார். தோல்பூர், ஆள்வார் அல்லது பிஹார் உள்ளிட்ட பல இடங்களில் சட்ட ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் தான் உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் காவல்துறை பலவீனமாக இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதாலும் ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா சட்டசபையில் குற்றம் சாட்டியிருந்தார்.