ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வருடந்தோறும் ஓணம் பண்டிகை நாளில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை ஓணம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு தினமும் மகா கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகள் நடக்கும்.

நாளை திருவோண சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று கோயில் வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தலைவாழை இலை போட்டு ஓண விருந்து வழங்கப்படுகிறது. 13ம் தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படுகிறது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

Related Stories: