முகமது தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தகோரி சீதாராம் யெச்சூரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் தலைவர் முகமது யூசுப் தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்  தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்த 5ம் தேதி ரத்து செய்த மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்த சட்ட மறுசீரமைப்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அங்கு  வன்முறை, அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பத்து நாட்களுக்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாததால் தடை உத்தரவு படிப்படியாக திரும்ப பெறப்பட்டு இயல்புநிலை திரும்பியதாக அரசு தெரிவித்தது.அதே சமயம், காஷ்மீர் சென்று நிலையை அறிந்து கொள்ள முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த தலைவரான முகமது யூசுப் தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், `தாரிகமி மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர். கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நான்கு முறை எம்எல்ஏ.வாக இருந்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லை. சிறப்பு அந்தஸ்து ரத்தின்போது  கைது செய்யப்பட்ட அவருடைய உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று கோரி அரசியலமைப்பு சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.இதனிடையே ராகுல்காந்தி தலைமையில் நகர் சென்ற எதிர்க்கட்சியினர் குழு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் அமைதி திரும்பியதாக கூறும் மத்திய அரசு, `ஏன் எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்வதை தடுத்து வருகிறது’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories: