மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட போலரிட்டி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலானது சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதத்திற்குள் 6 புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய மாடல்களில் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் ஒன்று முதல் 3 kW திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும்.இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் ஸ்போர்ட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் என்ற இரண்டு ரகத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஸ்போர்ட் குடும்ப வரிசையில் S1K, S2K மற்றும் S3K ஆகிய மாடல்களும், எக்ஸிகியூட்டிவ் வரிசையில் E1K, E2K மற்றும் E3K ஆகிய பெயர்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் என்றாலே, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போகும் என்ற அச்சம் எழும். இதற்கு தீர்வாக, பெடல் மூலமாக அதிவேகமாக இந்த பைக்குகளை இயக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. அதாவது, சைக்கிள்போல் மிதித்துக்கொண்டும் செல்ல முடியும்.