சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் 2004ல் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்ததாக கூறுவது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பாலன் ஹரிதாஸ் வாதிடும்போது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீதும், பேனர் வைத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு கசிந்து 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. விவிஐபிக்களை மலர் தூவி வரவேற்பதற்கு பள்ளி குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.