தூத்துக்குடியில் பயங்கரம்: காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சும் வகையில் காவல் நிலையம் அருகிலேயே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், பல்வேறு நிலையில் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தனது அண்ணன் முத்துக்குமார் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு சிவகுமார் திரும்பியுள்ளார். அப்போது அங்கிருந்த ஆட்டோவில் இருந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் 5 இருசக்கர வாகனங்களில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வந்ததாகவும், அவர்கள் சிவகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிவகுமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து பட்டப் பகலில் காவல் நிலையம் அருகே அரங்கேறிய இந்த கொலை சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார். மேலும் தொழில் போட்டியில் உள்ளவர்கள் எவரேனும் இக்கொலையை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: