லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சொந்தமானது தங்க நகைகளுடன் குப்பையில் வீசப்பட்ட இரும்பு லாக்கர்: சேத்துப்பட்டு அருகே மக்கள் அதிர்ச்சி

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே கோயிலுக்கு சொந்தமான இரும்பு லாக்கர் தங்க நகைகளுடன் குப்பையில் வீசப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமம் மலை மீது மிகவும் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ஜாகீர்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

அப்போது இக்கோயிலுக்கு சொந்தமான சுவாமி நகைகள் மற்றும் பணம் பாதுகாப்பாக வைக்க அப்போதைய ஜாதீர்தார்கள் கோயில் தர்மகர்த்தாவிடம் சுமார் 800 கிலோ எடையுள்ள ‘இரும்பு லாக்கரை’ வழங்கியுள்ளனர். இந்த இரும்பு லாக்கரை 3 தலைமுறை தர்மகர்த்தாக்கள் தங்கள் வீடுகளில் வைத்து கோயில் நகை மற்றும் பணத்தை பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தர்மகர்த்தாவாக இருந்த ஒருவரிடம் இருந்து லாக்கரில் வைக்கப்பட்ட நகை, பணத்தை அறநிலையத்துறையினர் பெற்றுச்சென்றனர். ஆனால் இந்த லாக்கர் மட்டும் தர்மகர்த்தா வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்போது அப்பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 16ம்தேதி அப்பகுதியில் உள்ள குப்பையில் இரும்பு லாக்கர் வீசப்பட்டு இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் சுதாகர், பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் ஊர்மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பையில் இருந்த லாக்கரை மீட்டு விசாரணை நடத்தினர்.

தர்மகர்த்தாவின் வாரிசுகள் தற்போது தங்கள் இடத்தில் வீடு கட்டி வருவதால், அவர்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்ட இந்த பெட்டியை பராமரிக்க முடியாமல் குப்பையில் வீசியிருக்கலாம் என தெரியவந்தது.  பின்னர் லாக்கரை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். நேற்று வேலூர் தொல்லியல் துறை காப்பாட்சியர் சரவணன், தாசில்தார்  சுதாகர்,  முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், லட்சுமி நரசிம்மர் கோயில் நிர்வாக  குழு உறுப்பினர்கள் முன்னிலையில் லாக்கரை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் அதனை உடைத்து பார்த்தபோது அதில் 43 கிராம் (5 சவரன்) தங்கத்தாலி மற்றும் தங்க குண்டுகள், 3 கிராம் ஜிமிக்கி, பித்தளையால் ஆன 17 காசுமாலை, பழைய ஒரு பைசா, 2 பைசா, 3 பைசாக்கள், அலுமினிய காசுகள் 1.5 கிலோ ஆகியவை  இருந்தது.  இதையடுத்து லாக்கரில் இருந்த பொருட்களை போளூர் கருவூலகத்தில் தாசில்தார் சுதாகர் ஒப்படைத்தார். கோயிலுக்கு சொந்தமான லாக்கர் தங்க நகைகளுடன் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: