திருமயம்: திருமயத்தில் பள்ளி எதிரே குப்பை கொட்டுதால் மாணவர்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுவதால் குப்பை தொட்டியை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலையில் காமராஜர் சாலையும் ஒன்று. இந்த சாலையின் ஒரு புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், அதன் நேர்எதிரே நூற்றாண்டு கண்ட அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. பள்ளி வளாகம் பகுதியில் தனியார் மருத்துமனை ஒன்று கும்பை தொட்டி வைத்துள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள நாய்கள், கால்நடைகள், பறவைகள் உணவுக்காக கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை தொட்டியை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருமயத்தில் சிறப்பு மிக்க இரண்டு அரசு பள்ளி வளாகத்தில் தனியார் குப்பை தொட்டி உள்ளது வேதனை அளிக்கிறது. பெரும்பாலும் குப்பை தொட்டி வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் தொட்டி நிரம்பி தொட்டி அருகே கழிவுகள் அப்பகுதியில் சிதறி கிடப்பதோடு துர்நாற்றம் வீசுவதால்அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளியில் உள்ள குழந்தைகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.
இதுபற்றி மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மனு கொடுத்த நிலையில் ஆய்வு செய்த அதிகாரிகள் குப்பை தொட்டியில் மருத்துவ கழிவுகள் இல்லை என கூறிவிட்டனர். தனியார் குப்பை தொட்டியை பொது வெளியில் வைக்க அனுமதிக்க கூடாது என்றனர். எனவே அரசுபள்ளி வளாகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான குப்பை தொட்டியை உடனே அகற்ற வேண்டும் என்றனர். இதுகுறித்து திருமயம் வட்டார கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் குப்பை தொட்டி சம்பந்தமாக திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.