கோவை: கஞ்சா பழக்கம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.தேனி, திண்டுக்கல் மற்றும் ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனை தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். ரயில் நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்த போது கையில் பையுடன் சென்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், தேனி ஆண்டிப்பட்டி அருகேயுள்ள தும்முக்குண்டு பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள் மகன் மலைச்சாமி (33) என தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் வைத்திருந்த செல்போனில் கஞ்சா குறித்த விவரங்களை வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. ‘ஏ கிரேடு சரக்கு ரெடி, வாங்க வந்து வாங்கிங்க’ என அவர் கஞ்சா போட்டோவுடன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பியிருந்தார். பீளமேடு, உக்கடம், கணபதி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் வாடிக்கையாளர்களாக இருப்பதாக தெரிகிறது.