*விதிகளை கடைபிடித்தால் மட்டுமே மாறும் தலைவிதி
இந்தியாவில் தினம்தோறும் சராசரியாக 1,214 சாலை விபத்துக்களும், ஆண்டுக்கு சுமார் 1,20,000 ஆயிரம் விபத்துக்களும் நடக்கின்றன. அதில் தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக ஆண்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 25.9 சதவீத விபத்துக்கள் இரு சக்கர வாகனங்களாலும், 25.6 சதவீத விபத்துக்கள் கார், ஜீப் போன்ற வாகனங்களாலும் ஏற்படுகிறது. கனரக வாகனங்களால் நிகழும் பொதுவிபத்துகள் 7.9 சதவீதமாகும். இதர விபத்துகள் பல்வேறு சூழல்களில் நடக்கிறது என்பது புள்ளி விபரத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்தாண்டில் (2018) 63 ஆயிரத்து 920 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 12,216 பேர் இறந்துள்ளனர். 74,537 பேர் படுகாயமடைந்துள்ளனர். சேலம் சரகத்தை பொறுத்தவரை சமீபத்திய நிலவரப்படி (ஆக.,13) சேலத்தில் 182 பேரும், நாமக்கல்லில் 226 பேரும், தர்மபுரியில் 98 பேரும், கிருஷ்ணகிரியில் 225 பேரும் என்று, மொத்தம் 731 பேர் உயிரிழந்துள்ளனர். போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத சாலைகளில் அசுர வேகம், போக்குவரத்து விதிமுறைகளை அறவே கடைபிடிக்காதது, மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே செல்வது போன்றவை தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாகும். விபத்தை தடுக்க போக்குவரத்து சட்டத்தில் கடுமையான விதிமுறைகள் இருப்பினும், அதிகாரிகள் அதை முறையாக அமல்படுத்துவதில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. இதனால் தான், தமிழகம் தொடர்ந்து சாலை விபத்துகளில் முந்திக்கொண்டிருக்கிறது என்பது வேதனை.
வாகனங்கள்: இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் 4 வழிச்சாலையாகவும், ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. சில நேரங்களில் வாகன ஓட்டிகள் குறுகிய நேரத்தில் செல்ல ஒரு வழிச்சாலையில் எதிர்புறமாக வாகனங்களில் வருகின்றனர்.
இதுபோன்ற வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இரவு நேரங்களில் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திக்கொள்கின்றனர். இரவில் வேகமாக வரும் வாகனங்கள் சாலையோரம் வாகனம் இருப்பது தெரியாமல் மோதி விடுகின்றன. இதில் பலர் உயிர் இழக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரத்தில், லாரிகள் நிறுத்துவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள், அதற்குரிய இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல், அலட்சியமாக சாலையோரத்தில் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் விபத்துக்கு காரணம் என்பது போக்குவரத்து போலீசாரின் வேதனை. தடுப்புச்சுவர் உயரம் அதிகரிப்பது நல்லது : இந்தியாவில் இரு வழிச்சாலையாக இருந்த பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள், 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் நடுவே ஒன்றரை அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் எழுப்பட்டது. அதன்பிறகு பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே இருக்கும் சாலையை பெயர்த்து எடுக்காமல், அதன்மீதே தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரோடும், தடுப்புச்சுவரும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன. இதனால் விபத்து நடக்கும்போது, வாகனம் எதிர்புறமாக வரும் வாகனத்தின் மீது மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்துகின்றன. தடுப்புச்சுவர் உயரம் அதிகமாக இருந்தால், வாகனம் ஏற்படும் போது, அந்த இடத்தில் வாகனம் நின்று விடும். விபத்துக்களையும் தவிர்க்கலாம். அலற விடும் ஹாரன்கள் அதிகரிக்கும் பாதிப்புகள்பெருகும் வாகனங்களால் உயரும் விபத்து அபாயம்
இந்தியாவில் 30ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் இரு வழிச்சாலையாக இருந்தது. சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், விபத்துக்களும் அதிகரித்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரச் சாலைத்திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலச்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 20 வருடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்து விட்டது. ஆனால் அதற்குரிய சாலை கட்டமைப்பும், மேம்பாடும் இல்ைல. இதுவும் விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் என்கின்றனர் போக்குவரத்து ஆர்வலர்கள்.அடித்தளமாகும் ஆர்வக்கோளாறு 30ஆண்டுகளுக்கு முன்பு, போக்குவரத்துக்கு பெரும்பாலான வீடுகளில் சைக்கிள் இருக்கும். அதிகபட்சமாக ஸ்கூட்டர் இருக்கும். வசதி படைத்தவர்கள் வீட்டில் காரை பார்க்கலாம். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் சைக்கிளை மறந்து விட்டோம். சைக்கிளில் செல்வதை கவுரவக்குறைச்சலாக நினைக்கிறோம். இன்று வீடுகளில் ஆளுக்கு ஒரு வாகனம் உள்ளது. இதை பார்க்கும் குழந்தைகள் சைக்கிள் என்ற ஒன்றையே மறந்து விட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக சிறு வயதிலேயே பைக், கார் ஓட்ட பழகிக்கொள்கின்றனர். பெரிய வாகனத்தை இயக்கும் இவர்களுக்கு பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் இருக்க வாய்ப்பில்லை. இதுவும் விபத்துகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது என்கின்றனர் பெரியவர்கள்.