தேர்தலில் வெற்றி பெறும் விவசாய சங்கத்துக்கு குடிமராமத்து பணி ஒதுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தண்டோரா அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் முறையில் பெரும்பான்மை பெறும் விவசாய சங்கத்திற்கு, குடிமராமத்து பணிகளை ஒதுக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணியை, குடிமராமத்து முறையில் மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 13.6.2019ல் பொதுப்பணித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 2019-20ல் 6,829 நீர்நிலைகளில் ₹499.68 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட கிராமத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரிடம் குடிமராமத்து பணிகளை வழங்காமல், ஆளுங்கட்சியினர் தரப்பில் புதிதாக துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினருக்கு பணிகளை ஒதுக்கி பெருமளவில் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, புதிய சங்கங்களுக்கு பணி ஒதுக்குவதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் குடிமராமத்து பணிகளை முடிக்க வேண்டியது அவசியம். இதில், பணிகளை மேற்கொள்வதில் ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாய சங்கங்களிடையே பிரச்னை எழுந்துள்ளது. இதில் குலுக்கல் முறையில் பணிகளை இறுதி செய்வது சரியாக இருக்காது. எனவே, விவசாயிகளையும், ஆயக்கட்டுதாரர்களையும் அதிகமாக கொண்ட சங்கத்தை அடையாளம் காண வேண்டியது அவசியம். அதேநேரம் இரு சங்கங்களிலும் இரட்டை உறுப்பினர்கள் பதிவு கூட இருக்கலாம். இதை சரிசெய்து, பெரும்பான்மையினரை கொண்ட சங்கம் எது என்பதை தேர்தல் நடைமுறை மூலமே அடையாளம் காணமுடியும்.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளின் தாசில்தார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊர்களில் பொது இடத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பை தண்டோரா மூலமும், சங்கங்களின் நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையிலும் தெரியப்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள விரும்பும் இரு சங்கங்களை ‘ஏ’,  ‘பி’ என இரு பிரிவாக பதிவிட்டு வாக்கு சீட்டுகளை வழங்கி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலில் எந்த சங்கம் அதிக வாக்குகளை பெறுகிறதோ, அந்த விவசாய சங்கத்தினருக்கு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை போலீஸ் தரப்பில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: