ஈரோட்டில் மயக்க ஸ்பிரே அடித்து ஆடு, கோழிகள் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆடு, கோழிகளுக்கு மயக்க ஸ்பிரே அடித்து அவற்றை திருடி சென்றது சிசிடிவி கேமரா மூலம் அம்பலமானது.  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள ஆலங்காட்டூர், கோரக்காட்டூர், கடுக்கம்பாளையம், சின்னகொரவன்பாளையம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக 25 வெள்ளாடுகள் மற்றும் 50க்கும் அதிகமான நாட்டுக்கோழிகள் திருடுபோயுள்ளன. முதலில் இது ஏதோ விலங்குகளின் செயல் என விவசாயிகள் எண்ணியுள்ளனர். ஆனால் அவர்கள் நினைத்ததை தவறு என்பதை ஆலங்காட்டூரில் ஒரே இரவில் நடந்த 3 திருட்டுகள் உறுதிப்படுத்தின. இதை தொடர்ந்து சதாசிவம் என்பவரது தோட்டத்தில் 18 நாட்டுக்கோழிகள் மற்றும் 1 வெள்ளாடு, மேலும் மூர்த்தி என்பவரது தோட்டத்தில் 6 நாட்டுக்கோழிகள், கோடிஸ்வரன் தோட்டத்தில் 1 வெள்ளாடு முதலியவை ஒரே இரவில் மாயமாயின. இதையடுத்து இதில் சதாசிவம் தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.

மேலும் அதை ஆய்வு செய்து பார்த்தபோது இரண்டு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் விலங்குகளை திருடி சென்றது பதிவாகியிருந்தது. மேலும் இதை தொடர்ந்து ஆடுகள் மற்றும் கோழிகள் சத்தம் போடாமல் இருக்க அவற்றின் மீது மயக்க ஸ்பிரே தெளித்து திருடி சென்றது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆலங்காட்டூர் மக்கள் சுற்றுவட்டார கிராமங்களில் விசாரித்தபோது அங்கும் ஆடு, கோழிகள் திருடப்படுவது தெரியவந்தது. இதை அடுத்து வறட்சியால் சரிவர விவசாயம் செய்யமுடியாமல் இருக்கும் தங்களை ஆடு மற்றும் கோழிகள் தான் காப்பாற்றி வந்ததாக கூறும் விவசாயிகள் திருடர்களை கண்டுபிடிப்பதுடன் இனி இதுபோல் நடக்காமல் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: