சென்னையில் வெளிநாட்டுப் பணத்தை வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது: போலீசார் விசாரணை

சென்னை: வெளிநாட்டு பணத்தை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சென்னையில் போலீசாரால் கைது கைது செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கும்பலில் தலைவன் தவிர மற்ற அனைவரும் பிடிபட்டனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வேஷ் ஆலம். இவர் சென்னை சவுகார்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 17ம் தேதி சுமன் என்பவர் வந்துள்ளார். மேலும் ரியால் என்ற சவுதி அரேபிய நாட்டுப் பணம் தன்னிடம் இருப்பதாகவும் 3 லட்சம் ரூபாய் இந்திய பணத்தை கொடுத்தால் அதற்கு 27 லட்சம் ரூபாய்க்கு நிகரான சவுதி ரியாலை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதை நம்பிய பர்வேஷ் 3 லட்சம் ரூபாய் பணத்தை தர ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி திருவான்மியூரில் உள்ள வடக்கு மாட வீதியில் பணத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 20ம் தேதி பணத்தோடு அங்கு சென்றார் பர்வேஷ்.

மேலும் சொன்னது போலவே ரியாலுடன் அங்கு வந்த சுமன் பர்வேஷுக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது அவரது வெளிநாட்டு பணத்தை பொது இடத்தில் வைத்து பிரித்து பார்த்தால் பிரச்சனை ஏதேனும் வரலாம் என்பதால் அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று தான் சரிபார்க்க வேண்டும் என கண்டிப்போடு கூறியுள்ளார். அதன்படி பர்வேஷ் பணப்பையை வீட்டிற்கு எடுத்து சென்று திறந்து பார்த்தப் போது சவுதி ரியால் என கூறி காகித கட்டுக்களை வைத்து மோசடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த பர்வேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தது. அதில் சுமன் வந்த இருசக்கர வாகன பதிவெண்ணை வைத்து விசாரித்த காவலர்கள் அது கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் நிற்பதை கண்டுபிடித்தனர். சுமனை மட்டும் பிடிக்கும் பட்சத்தில் அவரது கூட்டாளிகள் தப்பி விட வாய்ப்புள்ளதால் மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டது தனிப்படை.

அதன்படி சுமன் வந்த இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் பொருத்திய காவலர்கள் அதை எடுத்துச் செல்ல யார் வருகிறார்கள் என்பதை அறிய காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே மெக்கானிக் கடைக்கு வந்தார் சுமன். அவர் பைக்கை எடுத்துக் கொண்டு தாழம்பூரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது பின்தொடர்ந்த காவலர்கள் அங்கு பதுங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். இதை தொடர்ந்து சுமன் மற்றும் இரு பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் டெல்லி மற்றம் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்த நிலையில் இக்கும்பலின் தலைவன் ராபின் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். யாரும் சிந்தித்துக்கூட பார்க்க இயலாத நிலையில் மோசடி செய்து வந்த கும்பலை 24 மணி நேரத்திற்குள்ளாகவே பிடித்து வியக்கவைத்துள்ளது நமது காவல்துறை.

Related Stories: