சென்னை: வெளிநாட்டு கரன்சியை குறைந்த விலையில் தருவதாக கூறி, பேப்பர் கட்டுகளை கொடுத்து பல லட்சம் மோசடி செய்த 2 வடமாநில பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பர்வாஸ் அலாம் (32). சவுகார்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு டெல்லியை சேர்ந்த சுமன் (30) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர்.இந்நிலையில், கடந்த 18ம் தேதி பர்வாஸ் அலாமை சந்தித்த சுமன், என்னிடம் 27 லட்சம் மதிப்புள்ள சவுதி அரேபியா கரன்சி உள்ளது. அதை இந்திய பணமாக மாற்றுவதற்கு காலதாமதம் ஏற்படும். தற்போது எனக்கு அவசரமாக 3 லட்சம் தேவைப்படுகிறது. எனவே, நான் வைத்திருக்கும் கரன்சியை உங்களிடம் தருகிறேன். அதற்கு பதிலாக 3 லட்சம் தாருங்கள். நான் பணத்தை திருப்பி தந்ததும், சவுதி கரன்சியை பாதி தந்தால் போதும், என கூறியுள்ளார். இதற்கு பர்வாஸ் அலாம் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, சுமன் ஒரு பெட்டியில் சவுதிஅரேபியா கரன்சி கட்டுகளை கொண்டு வந்து பர்வாஸ் அலாமிடம் கொடுத்துவிட்டு, 3 லட்சத்ைத பெற்றுச் சென்றார். சிறிது நேரம் கழித்து, பர்வாஸ் அலாம் அந்த கரன்சி கட்டுகளை எடுத்து பார்த்தபோது, மேலே மட்டும் சவுதி பணம் இருந்துள்ளது. கீழே காகிதம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.