100 நாள் வேலை திட்டத்தை தொடரும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு வறுமையை ஒழிக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதால், ஏழைகளுக்கான நூறு நாள் வேலைத் திட்டத்தை தொடரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தின் போது விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சிக்கான மானியங்கள் குறித்தும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பட்ஜெட் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான பட்ஜெட் கடந்தாண்டு ரூ. 55,000 கோடியாக இருந்தது. நடப்பு பட்ஜெட்டில் அது ரூ. 60,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ள 99 சதவீத பயனாளிகளின் ஊதியம், இடைத்தரகர்கள் இன்றி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

ஏழைகளுக்கான இத்திட்டத்தை தொடர அரசு விரும்பவில்லை. ஏனெனில். மோடி தலைமையிலான அரசு வறுமை, ஏழ்மையை ஒழிப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டங்களுக்காக கடந்த நிதியாண்டில் ரூ. 3.58 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அது 76 சதவீதம் அதிகரித்து ரூ.5.77 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சாலை அமைக்கும் திட்டத்தின் மூன்றாவது பகுதியாக 1,25,000 கி.மீ. தொலைவிற்கான சாலை அமைக்க ரூ. 80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் வரும் 2024-25க்குள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 135 கி.மீ. தூரத்துக்கான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 1.50 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 2022ம் ஆண்டிற்குள் கழிப்பறை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு ஆகியவற்றுடன் கூடிய 1.95 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட உள்ளன என்றார்.

சுய உதவிக்குழு சாதனை

அமைச்சர் தோமர் மேலும் கூறுகையில், ‘‘கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2.7 சதவீதம் மட்டுமே வராக்கடன் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Related Stories: