அலகாபாத்: உபி.யில் சாதி மாறி திருமணம் செய்ததால் பாதுகாப்பு கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வந்த பாஜ எம்எல்ஏவின் மகள் சாக்ஷி, அவரது கணவர் அஜிதேஷ் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உபி.யின் பரேலி தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா உயர் வகுப்பை சேர்ந்தவர். அவரது மகள் சாக்ஷி, பட்டியலினத்தை சேர்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த திருமணத்தில் ராஜேஷ் மிஸ்ராவுக்கு விருப்பம் இல்லை. இதனால், தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி தம்பதியர் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ‘சாக்ஷியின் தந்தையோ அல்லது போலீசாரோ தங்களை தொந்தரவு செய்யக் கூடாது. அமைதியாக திருமண வாழ்க்கை வாழ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.