விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கரன்சி பறிமுதல்: பரபரப்பு தகவல்
சென்னை: சென்னையில் இருந்து விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் துபாய்க்கு கடத்த முயன்ற ₹1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்திற்குள் சென்றனர். அப்போது, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. மேற்கண்ட விமானத்தில் மிகப்பெரிய அளவிலான ஹவலா பணம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுகிறது. பயணி ஒருவர் சோதனையில் இருந்து தப்பி ஹவாலா பணத்துடன் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டர், என்ற தகவல் கிடைத்தது. உடனே சுங்க அதிகாரிகள் அவசர அவசரமாக விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கிடமான கைப்பைகளை சோதனையிட்டனர். இலங்கையை சேர்ந்த முகமது சபீர் (28) என்பவர் கைப்பையை திறந்து பார்த்தனர். அதில், கருப்பு கவரில் சுற்றப்பட்ட பெரிய பார்சல் இருந்தது. அதை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது ₹1 கோடி மதிப்புள்ள யூரோ, குவைத், தினார் உள்ளிட வெளிநாட்டு பணம் இருந்தது.
இந்த மாதம் 9ம் தேதி மத்திய வருவாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் நடத்திய திடீர் சோதனையில் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரிடம் இருந்து ₹7,83 கோடி மதிப்புடைய 23 கிலோ தங்கம் மற்றும் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட டிரோன் எனும் குட்டி ஹெலிகாப்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் தங்கம், குட்டி விமானம், சுங்க சோதனை இல்லாமல் எடுத்து செல்ல சுங்கத்துறை அதிகாரி ஒருவரே உடந்தையாக செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் சூப்பிரண்டென்ட் ஜெயராமன் என்பவரையும் கைது செய்தனர். இவரைப்போல் மேலும் சில கருப்பு ஆடுகள் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஏரோ பிரிட்ஜுக்குள் கொண்டு ₹1 கோடி கொடுத்த சம்பவத்தை பார்க்கும் போது சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கருப்பு ஆடுகள் அதிகரித்து வருவதாகவும் அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்தால்தான் கடத்தல் சம்பவம் குறையும் எனத் தெரிகிறது.