நெல்லை: நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக கால்நடைகள் தண்ணீருக்கு வழியின்றி தவிக்கின்றன. விவசாயிகள் நாற்று பாவ தண்ணீரின்றி நெல்லை கால்வாயில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து செல்கின்றனர். பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், மானூர் வட்டாரங்களில் தண்ணீருக்கே வழியின்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவால் தாமிரபரணி ஆற்றிலும் நாளுக்கு நாள் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. தாமிரபரணியின் கிளை கால்வாய்கள், குளங்கள் என பெரும்பாலான நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. நெல்லை அருகே குன்னத்தூர் சுற்றுவட்டாரங்களில் வறட்சியால் விவசாயிகள் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். குன்னத்தூர் சுற்றுவட்டாரங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். ஜூன் மாதத்தில் கார் சாகுபடிக்கான பணிகளை தொடங்கிவிடுவர். இவ்வாண்டு நெல்லை கால்வாயும் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் நாற்று பாவுவதற்கு கூட தண்ணீரின்றி தவிக்கின்றனர். நெல்லை கால்வாயில் குன்னத்தூர் வாய்க்கால் பாலத்திற்கு மேல்புறம் சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து நாற்று பாவுவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழை தாமதமாக வந்தால் நாற்றுக்கள் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.