புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் வேட்பாளராக, பாஜ.வை சேர்ந்த எம்பி.யான ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து, இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ கூட்டணிக்கு அதிக பெரும்பான்மை இருப்பதால் ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் சபாநாயகராக ேதர்வு செய்யப்படுவது உறுதி. எதிர்க்கட்சிகள் சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த எம்பி.யான ஓம் பிர்லாவை (57), சபாநாயகர் வேட்பாளராக பாஜ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோடாப்பண்டி தொகுதியில் இருந்து எம்பி.யாக தேர்வானவர் இவர், மூன்று முறை எம்எல்ஏ.வாகவும், 2 முறை எம்பி.யாகவும் இருந்துள்ளார். பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவர். கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய துணை தலைவராக இருக்கிறார்.