மொய் கணக்கு பார்த்ததில் தகராறு முதலிரவுக்கு செல்வதை தடுத்த தந்தை அடித்துக்கொலை: புதுமாப்பிள்ளை கைது

ஜெயங்கொண்டம்:  ஜெயங்கொண்டம்  அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமத்தை  சேர்ந்தவர் கோவிந்தன் மகன்  சண்முகம்(48). இவரது மகன் இளமதி(23). இவருக்கு கடந்த 14ம் தேதி  திருமணம் நடைபெற்றது. அன்றிரவு திருமண செலவு, மொய் வரவு குறித்து  தந்தை, மகன் இருவரும்  கணக்கு  பார்த்தனர். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறிவிட்டு  இளமதி முதலிரவு அறைக்கு   சென்றுவிட்டார்.

இதனால் தந்தை சண்முகம் கோபமடைந்து  வெளியில் கிடந்த கட்டையை  எடுத்துவந்து கணக்கை முடித்து  விட்டு உள்ளே போ  எனக்கூறி மகனை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இளமதி,  தந்தை வைத்திருந்த  கட்டையை  பறித்து  திருப்பி தாக்கி தள்ளி விட்டதில் சண்முகம் கீழே விழுந்து  மயங்கினார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார்  எனக்கூறி  சென்றனர்.இதுகுறித்து சண்முகத்தின் தம்பி அண்ணாதுரை  உடையார்பாளையம் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். போலீசார்  வழக்குப்பதிந்து இளமதியை கைது  செய்தனர்.

Related Stories: