சென்னை: விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 56 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த மனப் (31), சம்சூ (39) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகளாக துபாய் சென்று, திரும்பினர். அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடமைகளை சோதனையிட்டனர். அதில், எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து தீவிர சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இருவரிடமும் மொத்தம் 870 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹29 லட்சம். அவற்றை பறிமுதல் செய்தனர்.