புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் தொடர்ந்து 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உளவுத்துறை தலைவராக இருந்து கடந்த 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல், நாட்டின் 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் இவரது பணி சிறப்பாக இருந்தது. பாலகோட் தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை, இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட டோக்லாம் எல்லை பிரச்னைகள் போன்றவற்றை கையாண்டதில் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.