புதுடெல்லி: மத்தியப் பிரேதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை இழந்த 5 மாதத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாஜ. இம்மூன்று மாநிலங்களில் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 65 இடங்களில் 61ஐ பாஜ கைப்பற்றி சாதித்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவை வீழ்த்திய காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு மக்களவை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், ஐந்தே மாதத்தில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திவிட்டது பாஜ.காங்கிரஸ் ஆட்சியின் கீழ் உள்ள இம்மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 65 மக்களவை தொகுதிகளில் 61ஐ பாஜ கைப்பற்றி உள்ளது. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 28ஐ கப்பற்றி உள்ளது. எஞ்சிய ஒரு தோல்வி கூட மிக மிக குறைவான வாக்கு எண்ணிக்கையில்தான் ஏற்பட்டது.. இம்மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத், தனது சிந்த்வாரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் நகுல்நாத் 5.86 லட்சம் வாக்கு பெற்று வெற்றி பெற்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நாதன்சா கவ்ரேத்தி 5.48 லட்சம் வாக்குகள் பெற்று கடும் போட்டி கொடுத்தார்.