டெல்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரதீப் யாதவ் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து இருப்பதாக காங்கிரசை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும்படி கடந்த 2007ம் ஆண்டு சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2012ல் விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி சிபிஐ க்கு உத்தரவிட்டது.