கணவன், குழந்தையை கொன்ற இளம்பெண் சடலங்களை புதைத்த கள்ளக்காதலனும் கைது

ஆற்காடு:  வேலூர் மாவட்டம், திமிரி அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜா(25) எலக்ட்ரீஷியன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, சாத்தூர் மந்தைவெளியை சேர்ந்த தீபிகா(19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் பிரவீன்குமார்(1). கடந்த 13ம் தேதி முதல் ராஜாவும், மகன் பிரவீன்குமாரும் மாயமாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து ராஜாவின் சகோதரிகள் விசாரித்தபோது ராஜாவையும், குழந்தை பிரவீன்குமாரையும் தீபிகா கொன்று புதைத்தது தெரியவந்தது.தீபிகாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், சடலங்கள் தோண்டி எடுத்தனர். மேலும் இரட்டைக் கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

கொலையான ராஜாவின் நண்பர் ஜெயராஜ்(27), தீபிகாவின் தாய் விஜயா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரிடம், தான் ஒருத்தியே கொன்று, சடலங்களை புதைத்ததாக தீபிகா பிடிகொடுக்காமல் திரும்ப, திரும்ப கூறி வந்தார். இதையடுத்து போலீசார், தீபிகாவை ஆற்காடு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பத்மாவதி முன் ஆஜர்படுத்தி காவலில் வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ராஜாவின் நண்பர் ஜெயராஜிடம் போலீசார் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், காதல் கணவன் மற்றும் மகனை கொலை செய்த பிறகு 13ம் தேதி நள்ளிரவு தனது கள்ளக்காதலன் ஜெயராஜிற்கு தீபிகா போன் செய்து வீட்டிற்கு உடனே வருமாறு கூறி உள்ளார். அவர் அங்கு சென்றபோது, ராஜாவும், குழந்தை பிரவீன்குமாரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தீபிகாவிடம் விசாரித்துள்ளார். அவரிடம் கணவரையும், மகனையும் கொன்றுவிட்டதாக தீபிகா கூறி சடலங்களை புதைக்க உதவும்படி கூறி உள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலங்களை புதைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து ஜெயராஜையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: