அரக்கோணம்: அரக்கோணம் அருகே மணல் கடத்தலுக்காக பள்ளம் தோண்டிய போது ஆற்றில் மணல் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம், வளர்புரம், மின்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை, தனியார் நிலங்களில் மண், மணல் போன்றவைகளை அனுமதியின்றி எடுத்து லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனை வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், அரக்கோணம் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள நந்தியாற்றின் கரையையொட்டி நேற்று காலை 4 பேர் பள்ளம் தோண்டி மணல் திருடிக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மணல் சரிந்து 4 பேரும் அதில் சிக்கினர். இதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.