சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்வதால் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம், அனுபாநடை உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா தலைவர்கள் தோல்வி பயத்தில் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். கோவை சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்பநாயக்கன்பாளையத்தில் நடைபயணமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் அரசுடன் எடப்பாடி அரசும் சேர்ந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.